என்டரோவைரல் மெனிஞ்ஜைட்டிஸ் (Enteroviral Meningitis) நோய் மாணவர்களிடையே சில மாவட்டங்களில் பதிவாகியுள்ள நிலையில், அதன் பரவலைத் தடுக்கும் நோக்கில் கல்வி அமைச்சு புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
உயர் கல்வி, தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி கல்வி அமைச்சு, அனைத்து மாகாண கல்வி இயக்குநர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், பள்ளிகளில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை வலுப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
அமைச்சு குறிப்பின்படி, இந்த நோய் முதலில் மாத்தறை மாவட்டத்தின் டெனியாய பகுதியில் ஏப்ரல் மாதத்தில் கண்டறியப்பட்டு, பின்னர் நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களிலும் பரவியுள்ளது.
இந்த வைரஸ் நோய் பெரும்பாலும் குழந்தைகளையும் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களையும் தாக்கும் தன்மை கொண்டது. இது மாசுபட்ட உணவு, குடிநீர், சுத்தமற்ற கைகள், சுவாச துளிகள் மற்றும் நேரடி தொடர்பு மூலம் பரவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிகுறிகளாக திடீர் காய்ச்சல், கழுத்து இறுக்கம், சீற்றம், வலிப்பு மற்றும் சுயநினைவு மாற்றம் போன்றவை காணப்பட்டால் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு அனுப்புமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பள்ளிகளில் கை சுத்தம், சுத்தமான குடிநீர் வசதி, கழிவறை சுத்தம், வகுப்பறை காற்றோட்டம் மற்றும் கூட்ட நெரிசலை தவிர்த்தல் போன்ற சுகாதார நடவடிக்கைகளை கடுமையாக பின்பற்றுமாறு கல்வி அமைச்சு கூறியுள்ளது.





