இலங்கைக்குள் கடத்தப்படும் போதைப்பொருட்களின் உண்மையான அளவு, அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள அளவை விட பல மடங்கு அதிகமாக இருக்கக்கூடும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க எச்சரித்துள்ளார்.
நேற்று (29) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், 2025 ஒக்டோபர் 30 முதல் 2026 மே மாதம் வரை மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் 1,947 கிலோகிராம் ஹெரோயின், 2,062 கிலோகிராம் ‘ஐஸ்’ (Crystal Methamphetamine) மற்றும் 289 கிலோகிராம் கொக்கெய்ன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
“நாட்டிற்குள் வரும் அனைத்து போதைப்பொருட்களையும் நாம் கைப்பற்றியிருக்கிறோம் என்று நான் நம்பவில்லை. அனைத்தையும் பறிமுதல் செய்திருந்தால், கடத்தல்காரர்கள் தொடர்ந்து அவற்றை கொண்டு வர முயற்சிக்க மாட்டார்கள்,” என ஜனாதிபதி கூறினார்.
மேலும், கடந்த ஏழு மாதங்களில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் 1 இலட்சத்து 86 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் 21 வயதிற்குட்பட்ட 6,064 ஆண் இளைஞர்களும் 138 பெண் இளைஞர்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
“இந்த புள்ளிவிபரங்கள் எமது இளம் தலைமுறை போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எந்தளவு பாதிப்படைந்துள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றன,” என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.





