ஐக்கிய நாடுகள் சபை (UN) வெளியிடும் மோதல்களுடன் தொடர்புடைய பாலியல் வன்முறைகள் குறித்த வருடாந்திர கருப்புப் பட்டியலில், முதல் முறையாக Israel இணைக்கப்பட்டுள்ளது.
António Guterres வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, 2023 முதல் 2025 வரை காசா மற்றும் மேற்குக் கரை பகுதிகளில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இடம்பெற்றதாகக் கூறப்படும் 31 பாலியல் வன்முறை சம்பவங்கள் ஐ.நா.வால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
அவற்றில் 13 சம்பவங்கள் 2025 ஆம் ஆண்டிலும், மீதமுள்ள 18 சம்பவங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளிலும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்களில் பாலியல் பலாத்காரம், பாலியல் சித்திரவதை, கட்டாய நிர்வாணப்படுத்தல், பாலியல் பலாத்கார அச்சுறுத்தல் மற்றும் பிற பாலியல் வன்முறைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளடங்குவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான அணுகல் கட்டுப்பாடுகள் காரணமாக, பதிவுசெய்யப்பட்ட சம்பவங்கள் உண்மையான அளவை முழுமையாக பிரதிபலிக்காமல் இருக்கலாம் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இந்த குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் நிராகரித்துள்ளதுடன், இந்த தீர்மானம் அரசியல் நோக்கத்துடன் எடுக்கப்பட்டதாக கூறி, ஐ.நா. பொதுச் செயலாளரின் அலுவலகத்துடனான ஒத்துழைப்பை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இந்த கருப்புப் பட்டியல், ஆயுத மோதல்களில் பாலியல் வன்முறைகளுக்கு காரணமாக இருக்கலாம் என நம்பத்தகுந்த தகவல்களின் அடிப்படையில் சந்தேகிக்கப்படும் தரப்புகளை அடையாளப்படுத்தும் நோக்கில் ஐ.நா.வால் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.





