International Monetary Fund (IMF), விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாம் மற்றும் ஆறாம் மதிப்பீடுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இலங்கை அரசு மற்றும் இலங்கை மத்திய வங்கி வழங்கிய “Letter of Intent” ஆவணத்தை வெளியிட்டுள்ளது.
2026 மே 13 ஆம் திகதியிட்ட இந்தக் கடிதத்தில், ஜனாதிபதியும் நிதியமைச்சருமான Anura Kumara Dissanayake மற்றும் மத்திய வங்கி ஆளுநர் Nandalal Weerasinghe ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
அந்த ஆவணத்தில், 2024 மற்றும் 2025 ஆண்டுகளில் இலங்கை பொருளாதாரம் 5% வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாகவும், வருவாய் வசூல், வெளிநாட்டு கையிருப்பு அதிகரிப்பு மற்றும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னேற்றமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், எரிபொருள் மற்றும் மின்சாரத்திற்கு “செலவின அடிப்படையிலான விலை நிர்ணய முறையை” தொடர்ந்தும் அமல்படுத்த உறுதிபூண்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பொதுமக்களின் சுமையை குறைப்பதற்காக வழங்கப்பட்ட தற்காலிக நிவாரணங்கள் 2026 செப்டம்பர் இறுதிக்குள் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பற்ற மற்றும் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு எதிர்காலத்தில் வழங்கப்படும் உதவிகள், இலக்கு அடிப்படையிலான நலத்திட்டங்கள் மூலம் வழங்கப்படும் எனவும், அரச நிதி ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கைகள் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கோரியிருந்த SDR 508 மில்லியன் (சுமார் அமெரிக்க டொலர் 695 மில்லியன்) நிதி உதவியை IMF நிர்வாக சபை 2026 மே 27 ஆம் திகதி அங்கீகரித்துள்ளது.
இதன் மூலம், IMF திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கிடைத்த மொத்த நிதி உதவி சுமார் அமெரிக்க டொலர் 2.4 பில்லியனாக உயர்ந்துள்ளது.





