யாழ்ப்பாண மாணவி சிவலோகநாதன் வித்தியா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் யாழ்ப்பாண சிறைச்சாலையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
பொலிஸார் தெரிவிப்பதாவது, குறித்த கைதி நேற்று இரவு (24) சிறைச்சாலைக்குள் தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
2015ஆம் ஆண்டு நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்திய வித்தியா கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவரே இவர் ஆவார்.
இந்த ஆண்டின் மே மாதத்தில், சுவிஸ் குமார் உள்ளிட்ட நால்வருக்கு யாழ் மேல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. தலைமை நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவர் கொண்ட அமர்வு, குற்றவாளிகள் தாக்கல் செய்த மேன்முறையீடுகளை நிராகரித்திருந்தது.
எனினும், மேலும் இரு குற்றச்சாட்டுக்குட்பட்டோரின் மரண தண்டனைகள் நீக்கப்பட்டிருந்தன.
கைதியின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





