சீன தலைநகர் பீஜிங்கில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையிலான உயர்மட்ட சந்திப்பு ஆரம்பமானதாக சீன அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
புதினை சீன அதிபர் ஜி ஜின்பிங் வரவேற்று, மக்கள் மண்டபம் (Great Hall of the People) முன்பாக கை குலுக்கியதாகவும், இரு நாடுகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டதுடன் இருவரும் சிவப்பு கம்பளத்தில் நடந்துசென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு “வலுவானதும் நேர்மறையானதும்” என புதின் குறிப்பிட்டார். வெளிப்புற சவால்கள் இருந்தபோதும் பொருளாதார மற்றும் அரசியல் ஒத்துழைப்பு முன்னேற்றம் காண்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த சீன அதிபர் ஜி ஜின்பிங், சீனா–ரஷ்யா உறவு “தளராததும் வலுவானதும்” எனக் குறிப்பிட்டார். இரு நாடுகளும் அரசியல் நம்பிக்கை மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, மத்திய கிழக்கு நிலைமை தொடர்பாக கருத்து தெரிவித்த ஜி ஜின்பிங், தொடர்ந்து நடைபெறும் மோதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் உடனடி போர் நிறுத்தம் அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
புதின் தனது உரையில், சீனா மற்றும் ரஷ்யா இரு நாடுகளும் இறையாண்மை மற்றும் தேசிய ஒற்றுமையை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்பட தயாராக உள்ளன என தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் பொருளாதாரம், சுற்றுலா, கல்வி உள்ளிட்ட துறைகளை உள்ளடக்கிய சுமார் 40 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





