அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையில், ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பதற்கும், ஈரானின் அணு திட்டம் தொடர்பான புதிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்குமான தற்காலிக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்த உடன்பாடு அமெரிக்க ஜனாதிபதி Donald Trump அவர்களின் இறுதி ஒப்புதலை இன்னும் பெற வேண்டியுள்ளது.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட், “எல்லாம் ஜனாதிபதி எடுக்கும் முடிவைப் பொறுத்தது. அமெரிக்க மக்களுக்கு பாதகமான எந்த ஒப்பந்தத்தையும் டிரம்ப் ஏற்கமாட்டார்” என தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகங்களின் தகவலின்படி, இந்த தற்காலிக ஒப்பந்தத்தின் மூலம் ஹோர்முஸ் நீரிணையில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளதுடன், ஈரானின் அணு திட்டம் தொடர்பாக புதிய 60 நாள் பேச்சுவார்த்தை காலம் தொடங்கப்படவுள்ளது.
அமெரிக்க துணை ஜனாதிபதி JD Vance, “சில மொழி தொடர்பான அம்சங்கள் குறித்து இன்னும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் இரு தரப்பும் முன்னேற்றம் கண்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.
இதுவரை ஈரான் அதிகாரிகள் இந்த ஒப்பந்தம் குறித்து பொதுவாக எந்த கருத்தையும் வெளியிடவில்லை.
இதேவேளை, பிராந்திய பதற்றம் தொடர்ந்துவரும் நிலையில், அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM), ஈரான் புதன்கிழமை இரவு குவைத்தை நோக்கி ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், அது இடைமறிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பங்காற்றும் ஹோர்முஸ் நீரிணை தொடர்பான இந்த ஒப்பந்தம், உலக எரிசக்தி சந்தைகளுக்கும் மத்திய கிழக்கு பிராந்திய பாதுகாப்புக்கும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.





