சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, இலங்கை மற்றும் இந்தியாவின் மேற்குப் பகுதியுக்கிடையிலான விமான இணைப்புகள் மேலும் விரிவுபடுத்தப்படுகின்றன. இதன் கீழ், அகமதாபாத் – கொழும்பு இடையிலான நேரடி விமான சேவையை ஜூன் 19 முதல் FitsAir ஆரம்பிக்கவுள்ளது.
இந்த சேவை வாரத்திற்கு மூன்று நாட்கள் இயக்கப்படவுள்ளதுடன், இடைநிறுத்தங்களுடன் சுமார் 9 மணி நேரம் எடுத்த பயண நேரம் இனி சுமார் 3 மணி நேரமாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவிப்பதாவது, இந்தியா தொடர்ந்து இலங்கையின் மிகப்பெரிய சுற்றுலாப் பயணிகள் சந்தையாக உள்ளது. Cinnamon Hotels & Resorts நிறுவனத்தின் கமல் முனசிங்க WION ஊடகத்திடம் கருத்து தெரிவிக்கையில், கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து சுமார் 5 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்ததாகவும், இந்த ஆண்டில் அது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார்.
அவர் மேலும், இந்தியாவின் பல நகரங்களுடன் ஏற்கனவே நேரடி விமான சேவைகள் இருந்தாலும், அகமதாபாத் இதுவரை முழுமையாக பயன்படுத்தப்படாத முக்கிய சந்தையாக இருப்பதாக குறிப்பிட்டார்.
Walkers Tours நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நளக அமரதுங்க கூறுகையில், 2025ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளில் சுமார் 24 சதவீதம் இந்தியர்களாக இருந்ததாகவும், 5 இலட்சத்து 31 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள் இலங்கைக்கு வந்திருந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்திய நிறுவனங்களின் மாநாடுகள் மற்றும் தொழில்துறை நிகழ்வுகளுக்கான MICE சுற்றுலா தேவையும் அதிகரித்து வருவதாகவும், கொழும்பில் மேம்படுத்தப்பட்ட ஹோட்டல் வசதிகள் மற்றும் ஒருங்கிணைந்த ரிசோர்ட் திட்டங்கள் இதற்கு ஆதரவளித்து வருவதாகவும் அவர் கூறினார்.





