- ஷாதிர் ஏ ஜப்பார் –
தேசிய மாணவ வீரர் படையணியின் ரந்தெம்பே பயிற்சி முகாமில் மாகாண மட்டத்திற்கு பங்கு பற்றிய அம்பாறை மாவட்டத்தின் ஒரே ஒரு முஸ்லிம் பாடசாலையாக சம்மாந்துறை அல் அமீர் வித்தியாலய கடேட் மாணவர் படையணி தெரிவு செய்யப்பட்டுள்ளமை சம்மாந்துறை மண்ணுக்கான மற்றுமொரு மகுடமாக பார்க்கப்படுகின்றது
சம்மாந்துறை அல்-அமீர் வித்தியாலயத்தில் கடந்த மாதம் முதன்முறையாக கெடெட் படை அணி ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாத காலத்துக்குள்ளேயே, இப்படையணி ரந்தம்பே பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற ஒரு வாரகால மகாண மட்ட முகாமில் பங்கேற்பதற்கு தெரிவு செய்யப்பட்டிருப்பது எமதூருக்கு கிடைத்த மற்றுமொரு மகுடம் என படையணியின் கட்டளை அதிகாரி இரண்டாம் லெஃப்டினன்ட் எம்.எஸ்.எம். ஃபஷ்ரி ஆசிரியர் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இவ்விடயம், இப்பாடசாலை வரலாற்றில் இடம்பிடித்த ஒரு வரலாற்றுச் சாதனையாகும். இதற்கு முன்பு இப்பாடசாலையில் கெடெட் படையணி ஒன்று இருக்கவில்லை. இப்பெருமைக்கு முழு முதற் காரணமாக இருந்தவர் பாடசாலை அதிபர் எம்.எச். நூருல் ஹிமாயாவின் சிறந்த வழிகாட்டல், ஊக்குவிப்பு மற்றும் உதவி ஒத்தாசைகளே இப்படையணி குறுகிய காலத்திற்குள் இச் சாதனையை நிலைநாட்ட பிரதான காரணமாக அமைந்தது. அத்துடன் எமது மாணவர்களின் விடாமுயற்சியும் உற்சாகமும் இதற்கான இன்னொரு முக்கிய காரணம் எனவும் தெரிவித்ததுடன் சம்மாந்துறை அல் அமீர் பாடசாலையின் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் 17ஆவது படையணியின் கட்டளையிடும் அதிகாரி லெஃப்டினன்ட் கேர்ணல் அருணசாந்த அவர்களுக்கும், பயிற்சிக்குப் பொறுப்பான அதிகாரி கெப்டன் ஸ்டான்லீ அவர்களுக்கும், மேஜர் நாஸிர், மேஜர் நெளஷாட் வஃபீ மற்றும் வெயில், மழை பாராது எமது மாணவர்களுக்கு அயராது பயிற்சிகளை வழங்கிய கோப்ரல் அபே சிறிவர்தன ஆகியோரையும் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்
இம்முகாமில் பங்கு பற்றுவதற்காக இப்படையணியினர் இன்று (20) காலை பாடசாலையிலிருந்து முகாமிற்கு புறப்பட்டுச் சென்றிருந்தமை குறிப்பிடதக்கது.





