சிறுபோகத்தில் உரத் தட்டுப்பாடு ஏற்படாது: அமைச்சர் லால் காந்த உறுதி

இம்முறை சிறுபோகத்தில் எந்தவொரு பயிர்ச்செய்கைக்கும் உரத் தட்டுப்பாடு ஏற்படாது என்று விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.

கன்னொருவை தேசிய தகவல் மற்றும் தொடர்பாடல் மையத்தில் நேற்று (08) உரத்துறை தொடர்பான விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தற்போது சிறுபோகத்திற்குத் தேவையான உர இருப்புக்கள் நாட்டில் உள்ளதுடன், அவை விவசாய சேவை நிலையங்கள் ஊடாக விநியோகிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தனியார் துறையினரின் உர விநியோக நடவடிக்கைகளையும் மீண்டும் வழமை போன்று ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.

சில பகுதிகளில் விநியோகத் தாமதங்கள் காணப்பட்டாலும், அவற்றைத் தீர்த்து இனிவரும் காலங்களில் எவ்வித தடையுமின்றி உரத்தை வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வலியுறுத்தினார்.

அதேபோல், உரம் தொடர்பில் போலியான மற்றும் தவறான தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் பெரும்போகத்திற்குத் தேவையான உரத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதுடன், அரச மற்றும் தனியார் துறையினர் இணைந்து அந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், அதிக வினைத்திறன் கொண்ட புதிய தலைமுறை உரப் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், மண் பரிசோதனைக்குப் பின்னர் உரமிடும் முறையை மேலும் விரிவுபடுத்தவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் மேலதிகமாகத் தெரிவித்தார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore