இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினம் இடையே சேவையில் ஈடுபட்டிருந்த பயணிகள் கப்பல் ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக கடலில் பல மணி நேரம் சிக்கியிருந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த கப்பல் வெள்ளிக்கிழமை பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்டு சுமார் நான்கு மணிநேரத்தில் நாகப்பட்டினத்தை அடைய திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், கடும் கடல் அலைகள் மற்றும் இயந்திரக் கோளாறு காரணமாக இரவு 10.45 மணியளவிலேயே துறைமுகத்தை சென்றடைந்துள்ளது.
The Hindu செய்தியின்படி, 144 பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல், நாகப்பட்டினம் கடற்கரையிலிருந்து சுமார் இரண்டு கடல் மைல் தொலைவில் உள்ள கள்ளார் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்திய அதிகாரிகளும் உள்ளூர் மீனவர்களும் இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு, பழுதடைந்த கப்பலை மெதுவாக இழுத்து துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
கப்பலில் பயணித்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வடக்கு யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள காங்கேசன்துறையையும், இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள நாகப்பட்டினத்தையும் இணைக்கும் இந்த கப்பல் சேவை, இரு பிராந்தியங்களுக்கிடையிலான பயணிகள் தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




