சட்டவிரோத சூதாட்டம் மீது சோதனை – பொலிஸாரை தாக்கிய 4 பேர் கைது
அம்பாறை மாவட்டத்தின் 16ஆம் வங்குவா பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத சூதாட்டம் மற்றும் மதுபான கடத்தல் நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது பொலிஸாரை தாக்கிய 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாக்கியெல்லா பொலிஸார் தெரிவித்ததாவது, 119 தகவல் மையத்தின் தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடவடிக்கை செவ்வாய்க்கிழமை (14) மேற்கொள்ளப்பட்டது.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றபோது சிலர் தப்பிச் சென்றதுடன், சிலர் பொலிஸாரின் கடமையைத் தடுக்க முயன்று வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
நிலையை கட்டுப்படுத்த பாக்கியெல்லா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழு சம்பவ இடத்திற்கு சென்றது. இந்த மோதலின் போது ஒரு பொலிஸ் சார்ஜெண்ட் காயமடைந்து அம்பாறை பொதுவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
24 முதல் 52 வயதுக்குட்பட்ட, ராஜகலத்தென்ன பகுதியைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய சுமார் 10 பேரை கைது செய்ய விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில், சோதனையில் ஈடுபட்ட பொலிஸார் மதுபோதையில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சம்பந்தப்பட்ட அனைத்து பொலிஸாரும் நீதிமருத்துவரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டதாகவும், அவர்கள் மதுபானம் அருந்தவில்லை என மருத்துவ அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாக்கியெல்லா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





