நாட்டிற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நோக்கில், இலங்கை அரசு தற்போது ரஷ்யாவுடன் தூதரக மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், அரசாங்கம்-அரசாங்கம் அடிப்படையிலான ஒப்பந்தங்கள் மூலம் எரிபொருளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கூறினார்.
“முன்னர் ரஷ்யாவிலிருந்து எரிபொருள் பெறும் வாய்ப்பு எமக்கு கிடைக்கவில்லை. ஆனால் தற்போது அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தங்களின் மூலம் அதை மேற்கொள்ள முடியுமா என ஆராயப்படுகிறது,” என அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மேலதிக கலந்துரையாடல்களை முன்னெடுக்க ரஷ்யாவின் துணை எரிசக்தி அமைச்சர் விரைவில் இலங்கைக்கு வர உள்ளார் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை, இரான் வழங்க முன்வந்த எரிபொருள் உதவி குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், அந்த முன்மொழிவை அரசு வரவேற்கிறது என்றாலும், கப்பல் வசதி போன்ற போக்குவரத்து சவால்கள் இருப்பதாக கூறினார்.
“கப்பல் வசதி கொண்ட நாடுகளுக்கு இத்தகைய வாய்ப்புகளை பயன்படுத்த முடியும். எமக்கு அந்த வசதி இல்லாததால் சவால்கள் உள்ளன. இருப்பினும், அந்த உதவிக்கு நன்றி தெரிவிக்கிறோம்,” என அவர் தெரிவித்தார்.
அத்துடன், ஏற்கனவே மூல எரிபொருள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கான பல ஆர்டர்கள் இடப்பட்டுள்ளன என்றும், ஏப்ரல் மாதத்தில் சில கப்பல்கள் நாட்டை அடையும் எனவும் அவர் கூறினார்.
“ஏப்ரல் மாதத்தில் சில எரிபொருள் கப்பல்கள் வரவிருக்கின்றன. அதன்மூலம் எரிபொருள் விநியோகத்தை சீராக மேலாண்மை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது,” என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.





