பாடசாலை மற்றும் பிரத்தியேக வகுப்புக்களுக்குச் செல்லும் பெண் மாணவிகளை தொந்தரவு செய்தல், புகைப்படங்கள் எடுத்தல், வேகமாக தலைக்கவசம் அணியாது இரண்டுக்கு மேற்பட்டவர்களை ஏற்றிக் கொண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்தல், போதைப் பொருள் பாவனைக்கு உள்ளாதல், அதனை விற்றல் போன்ற சட்டவிரோத, தீய செயல்களில் எமது இளைஞர்கள் ஈடுபட்டு வருவதாக பாதுகாப்புத் தரப்பினராலும், பெற்றோர்களாலும் எமது சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களது இவ்வாறான செயல்களினால் சில மாணவிகள் தமது கல்வி நடவடிக்கைகளைக்கூட கைவிட்டுள்ளனர். இதுபற்றி இளைஞர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் பல தடவைகள் நம்பிக்கையாளர் சபை ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் செய்துள்ளது.
எனவே, தயவுசெய்து இளைஞர்களாகிய நீங்கள், இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு தமது பெற்றோர்களினதும், எமது ஊரினதும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி, பெண் மாணவிகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும், பெருநாள் நெருங்கி வரும் இக்கால கட்டத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் நடவடிக்கைகளும் கடுமையானதாக இருக்கும் என்பதால், தயவு செய்து பட்டாசுகளை கொழுத்துதல், பிறருக்கு அச்சுறுத்தலாக அமையும் வகையில் போக்குவரத்துச் சட்டங்களை மீறி மோட்டார் சைக்கிள்களில் றேஸ் ஓடுதல், கேளிக்கைகளில் ஈடுபடுதல் போன்ற செயல்களில் இருந்து தவிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அன்புள்ள பெற்றோர்களே!
மற்றும் தயவுசெய்து மேற்படி நிகழ்வுகளின் பாரதூரங்களை தங்கள் பிள்ளைகளுக்கு எடுத்துக்கூறி, தங்களது பிள்ளைகளுக்கு ஏற்படும் உடல் உயிராபத்துக்களில் இருந்தும், பாதுகாப்புத் தரப்பினரின் நடவடிக்கை, நீதிமன்ற நடவடிக்கை, பொருளாதார ரீதியான பாதிப்பு மற்றும் பாதிக்கப்படுபவர்களின் பிரார்த்தனை என்பவைகளில் இருந்தும் பாதுகாத்துக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
வஸ்ஸலாம்.
நம்பிக்கையாளர் சபை, இஸ்லாமிய செயலகம், பெரிய பள்ளிவாசல், சம்மாந்துறை





