மட்டக்களப்பில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றுக்கு, நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விலையை மீறி குடிநீர் போத்தலை விற்பனை செய்த குற்றச்சாட்டில் ரூ.500,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை (CAA) தெரிவிப்பதாவது, ரூ.70 அதிகபட்ச சில்லறை விலை குறிப்பிடப்பட்டிருந்த 500ml குடிநீர் போத்தல் ஒன்று ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகும்.
மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது இந்த மீறல் கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், குறித்த நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, நீதிமன்றம் உணவகத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம் விதித்துள்ளது.
மேலும், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில், பொதுமக்கள் 1977 என்ற நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் ஹொட்லைன் இலக்கத்திற்கு அலுவலக நேரங்களில் தகவல் வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.




