Turkish Airlines நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று நேபாளத்தின் பிரதான விமான நிலையத்தில் தரையிறங்கும் போது தீப்பற்றிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
Istanbul இலிருந்து புறப்பட்ட விமானம், Tribhuvan International Airport விமான நிலையத்தில் தரையிறங்கியபோது அதன் வலது தரையிறக்க சக்கரப்பகுதியில் தீ மற்றும் புகை ஏற்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவசர மீட்பு குழுக்கள் உடனடியாக செயல்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Airbus A330 வகையைச் சேர்ந்த இந்த விமானத்தில் 277 பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தையடுத்து, திங்கட்கிழமை காலை விமான நிலையம் மூடப்பட்டதுடன், காத்துமண்டு நோக்கி வந்த பல விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. விமான நிலையத்தின் ஒரே ஓடுபாதையை சுத்தம் செய்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் மாறிக்கொண்டிருக்கும் காலநிலை காரணமாக நேபாளத்தில் விமான விபத்துகள் அடிக்கடி இடம்பெறுகின்றன.
2015 ஆம் ஆண்டிலும், அடர்ந்த பனிமூட்டத்தில் தரையிறங்கிய Turkish Airlines விமானம் ஒன்று ஓடுபாதையில் சறுக்கி விபத்துக்குள்ளானதால், விமான நிலையம் பல நாட்கள் மூடப்பட்டிருந்தது.
அந்த சம்பவத்திலும் எவருக்கும் காயம் ஏற்படாததுடன், பின்னர் அந்த விமானம் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




