மார்ச் மாத இறுதியில் எரிபொருள் விலைகள் மீண்டும் உயர்த்தப்படாது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் (சிபிசி) தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர், அடுத்த எரிபொருள் விலை திருத்தம் உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலைகளின் அடிப்படையில் அரசாங்கத்தால் செய்யப்படும் என்று கூறினார்.
எரிபொருள் விலை திருத்தம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்,
“இந்த மாத இறுதியில் எரிபொருள் விலை திருத்தம் எதுவும் இருக்காது என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்” என்று கூறினார். மார்ச் 21 நள்ளிரவில் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டன. அதன்படி, ஆட்டோ டீசல் விலை லீட்டருக்கு ரூ. 79 உயர்த்தப்பட்டு ரூ. 382 ஆகவும், சூப்பர் டீசல் விலை லீட்டருக்கு ரூ. 90 உயர்த்தப்பட்டு ரூ. 443 ஆகவும், ஆக்டேன் 95 பெட்ரோல் விலை லீட்டருக்கு ரூ. 90 உயர்த்தப்பட்டு ரூ. 455 ஆகவும், ஆக்டேன் 92 பெட்ரோல் விலை லீட்டருக்கு ரூ. 81 உயர்த்தப்பட்டு ரூ. 398 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.





