அரச துறையில் டிஜிட்டல் மாற்றத்திற்கு புதிய வலையமைப்பு

அரசின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டத்தின் முக்கிய அங்கமாக, அரச துறையில் நிறுவன ரீதியிலான டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, பொதுச் சேவை மேம்படுத்தலுக்கான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிறுவன முன்னோடி வலையமைப்பு (Public Impact Champions Network – PIC-Net) நிறுவுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அரச துறையின் வினைத்திறனை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு உயர்தரமான சேவையை வழங்குவதே இதன் நோக்கமாகும்.

இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்கள பணிப்பாளர் நாயகங்கள், ஆணையாளர் நாயகங்கள், அரச கூட்டுத்தாபனங்கள், சட்ட பூர்வ சபைகள், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கையின் ஊடாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

PIC-Net வேலைத்திட்டத்தின் கீழ், தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு அரச நிறுவனமும், டிஜிட்டல் யுகத்தில் சிறந்த சேவையை மேம்படுத்துவதற்கு கூட்டாகப் பொறுப்பேற்கக்கூடிய நான்கு முன்னோடிகளைக் கொண்ட ஒரு குழுவை முழுப் பணியாளர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும்.

தொழில்நுட்பப் பயன்பாடு, சேவை அனுபவம், செயல்முறைத் திறன் மற்றும் நிறுவன மாற்றங்கள் ஆகிய அம்சங்களை ஒருங்கிணைந்த முறையிலும் சிறந்த தொடர்புடனும் மேம்படுத்துவதற்கு இந்தக் குழு கூட்டாகப் பொறுப்பேற்கும்.

இந்த முன்னோடிகள் அந்தந்த நிறுவனங்களுக்குள் முன்னெடுக்கப்படும் டிஜிட்டல் மாற்றத்திற்கான செயல்முறையின் மைய சக்தியாகச் செயல்படுவார்கள்.

இத்திட்டத்தின் மூலம் அரச துறை முழுவதும் பரவியுள்ள சுமார் 400 பேரைக் கொண்ட டிஜிட்டல் மாற்ற முன்னோடிகளின் தேசியக் குழு உருவாக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முன்னோடிகளுக்கு டிஜிட்டல் மாற்றம், சேவை மறுவடிவமைப்பு, செயல்முறை மேம்பாடு மற்றும் மாற்றங்களை நிர்வகித்தல் போன்ற விடயங்களில் நடைமுறைத் திறன்களை வளர்ப்பதற்கான முறையான பயிற்சியை வழங்குதல், நடைமுறை ரீதியிலான செயலமர்வுகளை நடத்தல் மற்றும் நிபுணர் வழிகாட்டல்களை வழங்குதல் ஆகியவை நடைபெறும்.

இந்த முன்னோடிகள் டிஜிட்டல் மாற்றத்திற்கான நிறுவன ரீதியான மைய அதிகாரிகளாக இத்திட்டத்தின் காலப்பகுதிக்கு அப்பாற்பட்டும் செயற்படுவதோடு, நிறுவனங்களுக்கு உள்ளேயும் நிறுவனங்களுக்கு இடையேயும் அறிவு மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் தீவிரமாகப் பங்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முழுமையான செயல்பாட்டின் போது தேவையான வழிகாட்டல் மற்றும் ஒருங்கிணைப்பு உதவிகளை ஜனாதிபதி செயலகம், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் GovTech Sri Lanka நிறுவனம் ஆகியன இணைந்து வழங்கும்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) ஆதரவுடன் இத்திட்டத்திற்கான முகாமைத்துவ ஆலோசகர்கள் நியமிக்கப்படுவதோடு, அத்துடன் நிறுவனத் தலைவர்களால் முன்மொழியப்படும் முன்னோடி அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறைக்கும் அவர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore