ஹட்டன் பகுதியில் பள்ளி மாணவர்கள் ஒருவரை தாக்கும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகளின் படி, இந்த சம்பவம் சுமார் 21 நாட்களுக்கு முன்பு, மார்ச் மாத ஆரம்பத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் தகவலின்படி, இது ஒரு பள்ளி ஒழுக்க நடவடிக்கையைச் சார்ந்த விவகாரமாகும். பாதிக்கப்பட்ட மாணவர், மற்றொரு மாணவர் புகைபிடித்ததாக வகுப்பு ஆசிரியரிடம் தெரிவித்திருந்தார். இதனால் ஏற்பட்ட பதற்றத்தின் காரணமாக, குறித்த மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இரு மாணவர்கள் சேர்ந்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் ஆரம்பத்தில் பள்ளி அதிபரின் தலையீட்டில் சமரசமாக தீர்க்க முயற்சிக்கப்பட்டதால், உடனடி புகார் அளிக்கப்படவில்லை.
ஆனால், தாக்குதல் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவரும் அவரது தாயாரும் மார்ச் 28 அன்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
காயமடைந்த மாணவர் மருத்துவ பரிசோதனைக்காக நீதிமருத்துவ அதிகாரியிடம் அனுப்பப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 16 வயதுடைய 3 மாணவர்களிடமிருந்து பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதுடன், அவர்கள் ஹட்டன் மற்றும் டிக்கோயா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.





