இலங்கையின் கல்வி மதிப்பீட்டு முறையை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது குறித்து, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் மதிப்பீட்டு செயல்முறையை ஆய்வு செய்யும் குழுவின் தலைவர் பேராசிரியர் லூக் வில்லியம் ஹார்டிங் ஆகியோருக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
மொழி ஆராய்ச்சி மற்றும் கல்வி மதிப்பீட்டில் உலகப் புகழ்பெற்ற நிபுணரான பேராசிரியர் லூக் வில்லியம் ஹார்டிங், மார்ச் 20 முதல் 25 வரை இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு உயர்மட்டச் சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார்.
இதன்போது பரீட்சைகள் திணைக்களம், தேசிய கல்வி நிறுவனம் மற்றும் டிஜிட்டல் செயலணி ஆகியவற்றுடன் கொள்கை ரீதியான ஆலோசனைகளை அவர் முன்னெடுக்கவுள்ளார்.
6ஆம் தரத்திற்கான ‘மொடியூல்’ (Module-based system) அடிப்படையிலான புதிய மதிப்பீட்டு முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் இதன்போது தெரிவித்தார்.
அத்துடன் வகுப்பறைச் செயற்பாடுகளைத் தர ரீதியாக மதிப்பீடு செய்வதற்கு ஆசிரியர்களுக்குத் தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
இந்த சீர்திருத்தங்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தேவையற்ற அழுத்தங்களைக் கொடுக்காமல், மாணவர்கள் தமது திறமைகளை அடையாளம் கண்டு கல்வி இலக்குகளை அடைய உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இந்த கலந்துரையாடலில் பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன, அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, தேர்வு ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே மற்றும் கல்விச் சீர்திருத்த மதிப்பீட்டுக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.





