சம்மாந்துறை மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் நிர்வாக சபை, புனித நோன்பு காலத்தை முன்னிட்டு சிறுவர்களை பள்ளிவாசலுடன் இணைக்கும் நோக்கில் முன்னெடுத்துள்ள பல்வேறு இஸ்லாமிய நிகழ்ச்சிகள் சமூகத்தில் பாராட்டைப் பெற்றுள்ளன.
நோன்பு காலங்களில் பள்ளிவாசல்கள் பொதுவாக மக்கள் நெரிசலுடன் காணப்படும் நிலையில், சிறுவர்களை முறையாக வழிநடத்துவதில் பல இடங்களில் சவால்கள் காணப்படுகின்றன. இதற்கு மாற்றாக, மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் நிர்வாகம் தமது எல்லைக்குள் வாழும் மாணவர்களை ஒருங்கிணைத்து, தினந்தோறும் இஸ்லாமிய அறிவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு செயற்பாடுகளை ஏற்பாடு செய்துள்ளது.
இதன்படி,
- ஐவேளையும் அவ்வல் ஜமாஅத்தில் தொழுகைக்கு சமூகமளித்தல்
- அல்குர்ஆன் ஓதுதல் நிகழ்ச்சிகள்
- பொதுவாக ஓதப்படும் துஆக்கள் மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல் நிகழ்ச்சிகள்
போன்ற பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த முயற்சிகள் மாணவர்களுக்கு பள்ளிவாசலுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தியதுடன், இஸ்லாமிய நெறிமுறைகளின் அடிப்படையில் அவர்களை வளர்க்கும் முக்கிய பங்களிப்பாக அமைந்துள்ளது.
மேலும், இந்த நிகழ்ச்சிகளில் 44 மாணவர்கள் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு பெறுமதியான பரிசுகள் வழங்கப்பட்டதுடன், அல்-மஷ்ரபுல் இஸ்லாமிய்யு வங்கியில் கணக்குகள் திறந்து அதில் பணம் வைப்புச் செய்து, அதற்குரிய புத்தகங்களும் வழங்கப்பட்டன. இது மற்ற மாணவர்களுக்கும் ஊக்கமாக அமைந்துள்ளது.
இந்த முன்னுதாரண முயற்சி, சிறுவர்களை மையமாகக் கொண்டு நல்ல சமூகத்தை உருவாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதுடன், ஏனைய பள்ளிவாசல்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்துள்ளது.
இந்நிகழ்வுகள் அனைத்தும் மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் தலைவர் ஷேக் அல்-ஹாபிழ் ALM. றிப்கான் நளீமி அவர்களின் தலைமையில் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் மஜ்லிஸ் அஷ்ஷூறா அமீர் MI. அமீர், ஜம்இய்யதுல் உலமா சபைத்தலைவர் அஷ்ஷேக் MLH. பஷீர், அல்-மஷ்ரபுல் இஸ்லாமிய்யு தலைவர் IA. ஜப்பார், நம்பிக்கையாளர் சபை பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்துத் தெரிவித்தனர்.





