மறைந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் பூதவுடல் மீதான இறுதிக்கிரியை இன்று (10) மாலை 5 மணிக்கு பொரளை பொது மயானத்தில் நடைபெற்றது.
கபில சந்திரசேன, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவரது மரணம் தொடர்பான விசாரணைகள் தற்போது கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் (CCD) ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கடந்த எட்டாம் திகதி (08) காலை அவர் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இதற்கிடையில், இவரது மரணம் குறித்த பிரேதப் பரிசோதனையை முன்னெடுப்பதற்காக, கொழும்பு பிரதான விசேட சட்ட வைத்திய அதிகாரி ஸ்ரீயந்த அமரரத்ன தலைமையில் ஐந்து பேர் கொண்ட விசேட சட்ட வைத்தியக் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
கோட்டை நீதவான் பசந்த அமரசேன வழங்கிய உத்தரவிற்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, பிரேதப் பரிசோதனை நேற்று (09) காலை கொழும்பு சட்ட வைத்திய மற்றும் நச்சுயியல் நிறுவனத்தில் நடைபெற்றது.
இதன்போது, மேலதிக ஆய்வுகூடப் பரிசோதனைகளுக்காக அவரது உடற்பாகங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




