மின் கட்டண அதிகரிப்பானது அரசின் கப்பம் – சஜித்

மின் கட்டண அதிகரிப்பானது அரசாங்கம் அறவிடும் கப்பம் என்றே கருத வேண்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர் இன்று (9) விடுத்துள்ள விசேட அறிவிப்பு ஒன்றிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டு வரும்வேளை, ஐக்கிய மக்கள் சக்தியும் இதில் கலந்து கொண்டு, தரமற்ற நிலக்கரி ஊழலின் சுமையை இந்நாட்டு மின்சார பாவனையாளர்கள் மீது சுமத்த வேண்டாம் என்று கோரிக்கைகளை முன்வைத்தது.

அந்த எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவும், அரசாங்கமும் 18% ஆல் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பை மேற்கொண்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்த மின்சாரக் கட்டண அதிகரிப்பானது 180 அலகுகளுக்கும் அதிகமாக பயன்படுத்தும் பாவனையாளர்களை, அதாவது உயர் மத்தியதர வர்க்கத்தினர், வியாபாரிகள், தொழிலதிபர்கள், தொழில்முனைவோர் ஆகியோரை பாதிக்கும்.

இந்த 18% கட்டண அதிகரிப்பை அரசாங்கம் அறவிடும் கப்பம் என்றே கருத வேண்டியுள்ளது.

தரமற்ற நிலக்கரியால் அரசுக்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடு கட்டிக்கொள்ளவே இந்த அதிகரிப்பை மேற்கொண்டுள்ளனர்.

தரமற்ற நிலக்கரியையே இறக்குமதி செய்துள்ளனர் என்று எதிர்க்கட்சி வெளிக்கொணர்ந்த சமயங்களில், அதனை ஏற்றுக்கொள்ளாது, அது தரமற்றதல்ல என்று அரசாங்கம் தொடர்ச்சியாக கூறி வந்தது.

பின்னர் நிலக்கரி தரமற்றதே என்றாலும் இங்கு ஊழல் எதுவும் நடக்கவில்லை என்று அரசாங்கம் கூறியது.

தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் மின்சார உற்பத்தி குறைந்து எரிபொருள் சார்ந்த மின் நிலையங்களை நாட வேண்டிய நிலைக்கு ஆளானது. இதனால் செலவுகள் அதிகரித்தன.

இறுதியில் இந்த அதிகரிப்பை உயர் மத்தியதர வர்க்கத்தினர் மீதும், வியாபாரிகள் மீதும், தொழிலதிபர்கள் மீதும், தொழில்முனைவோர் மீதும் சுமத்தியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு 52% பங்களிப்பைப் பெற்றுத் தரும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாண்மையினர் கூட இந்த ஊழல் நிலக்கரி விவகாரத்தின் நட்டத்தை செலுத்த வேண்டிய நிலைக்கு இன்று ஆளாகியுள்ளனர்.

இவ்வாறு நடந்து கொள்வதற்காக வேண்டி மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசை அமைக்கவில்லை. ஊழல் நிறைந்த நிலக்கரி பெறுகைகளை முன்னெடுத்துவிட்டு, அதன் நட்டத்தை உயர் மத்தியதர வர்க்கத்தினர் மீதும், தொழில் முனைவோர் மீதும் சுமத்துவதற்கு மக்கள் இவ்வாறு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆணையைப் பெற்றுத்தரவில்லை.

இவ்வாறு கப்பம் அறவிடுவதற்கு நான் எனது எதிர்ப்பை தெரிவிக்கிறேன். இந்த கட்டண அதிகரிப்பு அநீதியான செயலாகும்.

தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்தவர்களிடமிருந்தே இதற்காண நட்டத்தை ஈடுகட்டிக் கொள்ள வேண்டும். நிலக்கரி ஊழலினால் ஏற்பட்ட நட்டத்தை மக்கள் மீது சுமத்தக் கூடாது. பெறுகை செய்து, இறக்குமதி செய்தோர்களே இதற்கு பொறுப்புக்கூற வேண்டும். நாட்டு மக்களிடம் இருந்து ஊழலின் நட்டத்தை ஈடிகட்டிக்கொள்ள இவ்வாறு கப்பம் அறவிடுவதை முழு நாடே கண்டிக்கிறது.

அதிகரிக்கப்பட்ட மின்கட்டணத்தை திரும்பப் பெறப்பட வேண்டும். இதனால் நாட்டிற்கு வரவிருக்கும் முதலீடுகளும் கூட நாட்டை விட்டுச் செல்லும் நிலை ஏற்படும்.

நேரடி வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க வேண்டுமே தவிர நாட்டை விட்டு விரட்டும் விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது. இவ்வாறான மின்கட்டண அதிகரிப்பால் முதலீட்டாளர்கள் வேறு முதலீட்டு வலங்களை நோக்கி திரும்புவார்கள்.

இந்த அரசாங்கம் மேற்கொண்ட இந்த அதிகரிப்பையும், இந்த கொள்கையையும் நாம் வண்மையாக கண்டிக்கிறோம். இதற்கு எமது எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore