வீரமுனை PHI பிரிவில் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் “சீர்பாத தேவி சிறுவர் அபிவிருத்தி நிலையத்திற்கு” (06) பொதுச் சுகாதாரப் பரிசோதகர் குழுவினரால் விசேட கள விஜயம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடவடிக்கையில் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் சி.எம். முனாஸ் அவர்களும் இணைந்து கலந்து கொண்டார்.
சிறுவர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார சூழலை மதிப்பீடு செய்வதற்காக நிலையத்தின் பல்வேறு பகுதிகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன.
இதன்போது,
- நிலையத்தின் சுற்றாடல் தூய்மை
- சமையலறை மற்றும் களஞ்சிய அறையின் தரநிலை
- குளியலறை மற்றும் கழிவறைகளின் சுகாதார நிலை
- சிறுவர்கள் தங்கும் மற்றும் கல்வி கற்கும் சூழல்
- பொழுதுபோக்கு பகுதிகளின் பாதுகாப்பு
ஆகிய விடயங்கள் பரிசோதிக்கப்பட்டன.
மேலும், சிறுவர்களுக்காக தயாரிக்கப்பட்டிருந்த மதிய உணவின் தரம், சுகாதாரம் மற்றும் சுவை என்பனவும் நேரடியாக மதிப்பீடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அர்ப்பணிப்புடன் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்நிலையத்தின் தற்போதைய நிலை தொடர்பான விரிவான அறிக்கை, நிர்வாகத்தினருக்கும் சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளருக்கும் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர் குழுவினர் தெரிவித்தனர்.
“சிறுவர்களின் எதிர்காலம் அவர்கள் வளரும் ஆரோக்கியமான சூழலிலேயே தங்கியுள்ளது. பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லங்களின் தரத்தை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.




