அம்பாறை மாவட்ட அனார்த்த முகாமைத்துவ நிலையத்தினால் கடந்த 7 மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த “உயிர்காப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை” (Lifesaving and Disaster Response Training) பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்த பயிலுனர்களுக்கான சான்றிதழ் வழங்கும் பெருவிழாவும், இப்தார் நிகழ்வும் மார்ச் 1 திகதி சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட அனார்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி. முகம்மது ரியாஸ் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக இராணுவத்தின் 24வது டிவிஷன் பொது கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் WMNKD பண்டார, தென்கிழக்கு கடற்படை கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் N. ரணசிங்க மற்றும் கல்முனை மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு. டபிள்யூ.ஏ.என். பிரதீப் குமார
கலந்துகொண்டனர்.
மேலும், சிறப்பு விருந்தினர்களாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் அல்-ஹாஜ் S.L.M. ஹனீபா, பிரதேச சபை தவிசாளர் அல்-ஹாஜ் I.L.M. மாஹிர், ஆகியோருடன் ஆன்மீகப் பெரியார்களான ரம்ஸீன் காரியப்பர் மௌலவி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
கடந்த 7 மாதங்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வழங்கப்பட்ட தீவிர பயிற்சியில், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள், முதலுதவி மற்றும் அவசரகால இடர் மேலாண்மை போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்ற 28 பயிலுனர்களுக்கு இதன்போது உத்தியோகபூர்வ சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதன் மூலம் அம்பாறை மாவட்டத்தின் அவசரகால பாதுகாப்புப் பலத்தை அதிகரிக்கும் நோக்கில் ஒரு புதிய “உயிர்காப்புப் படை” (Lifesaving Force) உத்தியோகபூர்வமாக உள்வாங்கப்பட்டுள்ளது.
நிகழ்வின் இறுதியாக, ரமழான் மாதத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட இப்தார் நிகழ்வில் அனைத்து அதிகாரிகள் மற்றும் பயிற்சி முடித்த வீரர்கள் ஒன்றிணைந்து பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.





