ஈரானில் இருந்து ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் மூன்று ட்ரோன் விமானங்களையும் தமது வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக தடுத்ததாக ஐக்கிய அரபு அமீரக (UAE) பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று (08) வெளியிடப்பட்ட அறிக்கையில், ஈரான் மற்றும் UAE இடையே தொடர்ச்சியாக நிலவி வரும் பதற்றநிலையின் பின்னணியிலேயே இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “ஈரானிய தாக்குதல்கள்” ஆரம்பமானதிலிருந்து இதுவரை மொத்தமாக 551 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 29 க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் 2,263 ட்ரோன்கள் தடுக்கப்பட்டுள்ளதாகவும் UAE பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அண்மைய தாக்குதலில் மூவர் மிதமான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், பதற்றநிலை ஆரம்பித்ததிலிருந்து பல்வேறு தேசியங்களைச் சேர்ந்த 230 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, அண்மைய தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இடம்பெற்ற தாக்குதல்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன், இரு இராணுவத்தினரும் மற்றும் ஆயுதப்படையுடன் இணைந்து பணியாற்றிய மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பை இலக்காகக் கொண்ட எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள UAE முழுமையாக தயாராக இருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.




