எத்தியோப்பியாவின் ஹராரி பிராந்தியத்தில் 12 ஆண்டுகள் குழந்தைக்காக காத்திருந்த ஒரு பெண், அரிய வகையான ஐந்து குழந்தைகளை (quintuplets) ஒரே நேரத்தில் பெற்றெடுத்துள்ளார்.
பேத்ரியா அடேம் என்ற 35 வயதுடைய பெண், தனது கணவருடன் சேர்ந்து “ஒரே நேரத்தில் ஐந்து குழந்தைகள் கிடைத்தது பெரிய மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார். மருத்துவமனை தகவலின்படி, அவர் நான்கு ஆண் குழந்தைகளையும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார். குழந்தைகள் அனைவரும் நலமாக உள்ளனர்.
இக்குழந்தைகள் ஹிவோட் ஃபானா சிறப்பு மருத்துவமனையில் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளின் எடை சுமார் 1.3 முதல் 1.4 கிலோ வரை இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மருத்துவ இயக்குனர் டாக்டர் முகமது நூர் அப்துலாஹி கூறுகையில், இயற்கையான முறையில் (IVF இல்லாமல்) இவ்வாறு ஐந்து குழந்தைகள் பிறப்பது மிகவும் அரிதானது என்றும், இதற்கான வாய்ப்பு சுமார் 5.5 கோடியில் ஒன்று மட்டுமே எனவும் தெரிவித்துள்ளார்.
பேத்ரியா அடேம் கூறுகையில், ஆரம்பத்தில் நான்கு குழந்தைகள் இருப்பதாக கூறப்பட்டிருந்தாலும், பிறப்பின் போது ஐந்து குழந்தைகள் பிறந்தது தமக்கு பெரும் அதிர்ச்சி மற்றும் மகிழ்ச்சியை அளித்ததாக தெரிவித்தார். மேலும், 12 ஆண்டுகளாக மன உளைச்சலுடன் இருந்ததாகவும், தற்போது அந்த வேதனை முடிவடைந்ததாகவும் கூறினார்.
குழந்தைகளுக்கு நைஃப், அம்மார், முன்சிர், நசிரா மற்றும் அன்சார் என பெயரிடப்பட்டுள்ளது. குடும்பத்தின் எதிர்காலம் குறித்து கவலை இருந்தாலும், சமூகமும் அரசும் உதவும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.




